சென்னை: எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கவுன்சிலிங் வரும் 19ம் தேதி தொடங்குகிறது, முதல் கட்டமாக 2,500 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான முதல் கட்ட பொதுக் கலந்தாய்வு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக 18ம் தேதி சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. மருத்துவ படிப்பில் சேர தகுதியுள்ள 28,785 மாணவர்களுக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பப்படுகிறது. இதில் முதல் கட்டமாக 2,500 மாணவர்கள் அவரவர் பெற்ற கட்-ஆப் மார்க் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்கிறார்கள். இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு இடங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
