காகம் கொத்தியதில் விரக்தி: சனி பகவானுக்கு அஞ்சி விஷம் குடித்த எஞ்ஜினியர்

காகம் கொத்தியதில் விரக்தி: சனி பகவானுக்கு அஞ்சி விஷம் குடித்த எஞ்ஜினியர்

பெங்களூர்: பெங்களூரில் தலையில் காகம் கொத்தியதால் விரக்தியடைந்த சாப்ட்வேர் எஞ்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகமாநிலம் கதக் மாவட்டம் லக்ஷ்மேஸ்வரா பகுதியை சேர்ந்தவர் விருபாட்சா. இவரது மகன் ஆனந்த் (23). பெங்களூர் எச்ஏஎல் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளராக வேலை பார்த்து வந்தார். பெங்களூர் அருகே வாடகை வீட்டில் தனது தம்பியுடன் வசித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு காலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தபோது காகங்கள் அவரை துரத்தி தலையில் தாக்கின. தொடர்ந்து இரண்டு நாட்களாக இப்படி நடந்ததால் வருத்தம் அடைந்த ஆனந்த், ஜோதிடர் ஒருவரிடம் சென்று விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அவர், சனி பகவான் பிடிக்க விரட்டுவதாகவும், சனி பிடித்தால் விடாது, ஏழரை ஆண்டுகளுக்கு தொடர்ந்து வீட்டில் கஷ்டங்கள் ஏற்படும் என்றும், அவரது தாய் தந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று பயமுறுத்தியுள்ளார். இதனால் வருத்தமடைந்த ஆனந்த், இந்த தகவலை தனது தாய்க்கு போனில் தெரிவித்துள்ளார். ஜோதிடர் சொல்வது போல ஒன்றும் நடக்காது தைரியமாக இரு என்று அவரது தாயார் ஆறுதல் கூறினார். ஆனாலும் சமாதானம் அடையாத ஆனந்த், தன்னால்தான் தந்தைக்கு உடல்நிலை பாதித்துள்ளது என கருதி, நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். காகம் கொத்தியதற்காக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook